Pages

Wednesday, May 8, 2013

ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்கள்

ஃபோன் பண்ணி  “இன்னிக்கு lunch சாப்பிட வரமுடியாதும்மா” ன்னு ரங்கு சொல்லும்போது மனசுக்குளே "Yes Yes Yes....”ன்னு வெற்றிக்குறி காட்டிண்டாலும், வெளியே சோகமான முகத்துடன், "ஏன்? அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேள் " போன்ற சம்பிரதாயக் கேள்விகளை சும்மாங்காச்சுக்கும் கேட்டு வைப்போம்.இந்த பதிவும் அதே மாதிரி தான்!

அதே மாதிரி தான் இந்த ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்ஸ்! ஹய்யா ஜாலி, ரெண்டு நாள் சமயல் இல்லை, ரங்கு ஊருக்கு போனா நமக்கு இம்மீடியட்டா வெக்கேஷன் மூட் தானே வரது.. டைம் டேபிள் வாழ்க்கைக்கு ஒரு டாட்டா காட்டிடலாம்! நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்.

அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, அந்த பொற்காலம் மட்டும் என் வாழ்வில இது வரை வந்ததேயில்லை! 

ஒரு வாட்டி அபுதாபியிலேந்து எங்கேயே பக்கத்து ஊருக்கு, சரி சரி.. பக்கத்து நாட்டுக்கு  ரங்ஸ் பிஸினெஸ் ட்ரிப்புன்னு சொன்னார்.. நானும் தலைகாணி பாய், ஃப்ளீஸ் ப்ளான்கெட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு இவரை வழியனுப்பிட்டு தாழ் போட்டுண்டு படுத்தா ஒரு மணி நேரத்துல ஃப்ளைட் கான்ஸெல்ன்னு சொல்லிட்டு திரும்பி வந்துட்டார்! பிஸ்னெஸ் ட்ரிப்பும் இல்லே, என் வெக்கேஷனும் இல்லே! 

அதற்கடுத்த வாட்டி நான் அதே மாதிரி தலைகாணி, பாய், ஃப்ளீஸ் ப்ளான்கேட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு வழியனுப்பினேன். அப்போவும் சீக்கிரம் வேலை ஆயிடுத்துன்னு ரெண்டு நாள் ட்ரிப்பை ஒரே நாளில் முடிச்சுண்டு ஓடி வந்துட்டார்..

 நானும் இவர் கிளம்பும் போது “ஐ மிஸ் யூ” எல்லாம் சொல்லி, கண்ல ஜலம் வெச்சுண்டு சூப்பரா ஆக்ட்டு குடுத்து பார்த்தாச்சு, மசியவே மாட்டேங்கறார்.. நான் தலைகாணியை திருப்பிவெச்சுண்டு அந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கறதுக்குள்ள குறு குறுன்னு மூக்குல வேர்த்து ஓடி வந்து டிங் டாங்ன்னு பெல் அடிச்சுடுறார்!நற நற! 

போன வருஷம் இப்படித்தான் பிஸினெஸ் ட்ரிப், 8 நாள் ஆகும்(ஹய்ய்ய்ய்ய்ய்யா) பாம்பே போறேன், நீ இருந்துப்பியா?(இதறகாகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் மஹாதேவா?) பயம் இல்லையே(பயமா எனக்கா? என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா?) ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு (என் ஃபோனையே எங்கேன்னு தேடணும், நான் தூங்க போறேன்,நீங்க கொஞ்சம் புறப்பட்டா தேவலை) அப்படீன்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணி அனுப்பி வெச்சா ரயில்லே பாம்பே போயிட்டு கேளுங்க மக்களே.. 5 நாள்.. அஞ்சே நாள்ல குடுகுடுன்னு ஓடி திரும்ப வந்திருக்கார். போன அலுப்பு கூட தீர்ந்திருக்காது.. அதுக்குள்ள புறப்பட்டு வந்தாச்சு.. அதுக்குள்ளேயுமா வந்துட்டார்ன்னு ஊர்ல இருக்கறவா எல்லாரும் ஃபோன் பண்ணி துக்கம் விஜாரிக்கறா.. பின்னே நான் ஊர்வசி மாதிரி எங்காத்துக்காரர் ஊருக்கு போயிருக்கார்ன்னு ட்ரம்பெட் வாசிச்சு சொல்லியாச்சு. 5 நாள் போன வழி தெரியலை! ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம் (க்கும் ரொம்ப முக்கியம், உங்களை சும்மாவா விட்டா?) அதுக்குள்ளே கிளம்பிட்டேளான்னு கேட்டாளாம் (இருக்காதோ பின்னே? யாராவது மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ?)வரும்போது ஃப்ளைட் ட்ரை பண்ணினாராம்(நல்ல வேளை, கிடைக்கலை! அது மட்டும் கிடைச்சிருந்தது, மொத்தமா அந்த ப்ரைவேட் ஏர்லைன்ஸ்களையே நாசம் பண்ணி இருப்பேன்)

போன வாரம் மறுபடியும் என் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கற மாதிரி இருந்தது. 5 நாள் அத்தியாவசிய பிரயாணம். போயே ஆகணும்(பின்னே.. கிளம்பிடுங்கோ) நீ இருந்துப்பியா? (பின்னே செத்துடுவேனா? ) அப்படி இப்படின்னு கேட்டுட்டு 12 மணிக்கு கிளம்புவேன்னு சொன்னார். நானும் ஆ.......வலா பார்த்துண்டு இருந்தேன். ம்ஹும்.. வடிவேல் மாதிரி ”என் நீ க்ளைண்ட்மா..அவர் வந்து கூட்டிண்டு போவார்”ன்னு வெயிட் பண்ணி கடைசியில அவர் 5 மணிக்கு தான் வந்தார். நற நற...பால்கனியில் எட்டிப்பார்த்து டாட்டா சொல்லிட்டு ஜாலியா பாட்டு பாடிண்டே வெளீல கிளம்பி போய்ட்டு வந்தேன். நைட் எப்பையும் போல தூங்கிட்டு கார்த்தால என்னிக்கும் இல்லாம 8.30 வரை தூங்கி எழுந்தேன். (பின்னே பாக்கி நாள் தான் 8 மணிக்கே வெள்ளென எழுந்துடுவேனே! ;-) )நாள் முழுதும் அருண் வருண் கூட ட்ராயிங் பெயிண்டிங் எல்லாம் பண்ணிட்டு பொழுதை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வந்துட்டு வேணும்னே தூங்காம டீவீ பார்த்து, ஃபேஸ்புக்கில் காணமல் போனவர்க்ளை பற்றிய அறிவெப்பெல்லாம் படிச்சுட்டு, ஒரே விளையாட்டை வித விதமா விளையாடி, பழைய தந்தியால தெலுங்கு படங்களை டவுன்லோடி பார்த்து சிரித்து(அதான் நான் சிரிக்கும் கடைசி சிரிப்புன்னு எனக்கு தெரியாம போயிடுத்து) சிரிச்சுண்டு இருந்தேனா.. அப்போத்தான் அந்த செய்தி வந்தது.. ரங்கு தான், நான் வந்த வேலை முடிஞ்சது (அதுக்குள்ளேயா?) நான் இப்போ கிளம்பறேன்(அடுத்த ஊருக்கு தானே?) இல்லைம்மா, பாலக்காடு ப்ரோக்ராம் கான்ஸெல்(”அட ராமா”) ஆமா, இப்போ சென்னை வண்டிக்கு வெயிட்டிங், கார்த்தால 7 மணிக்கு சென்னை வந்துடும்(7 மணிக்கேவா, இப்போவே 1 மணி ஆச்சே, எப்படி 7 மணிக்கே சென்னை வரும்?) சரி கார்த்தல பார்க்கலாம்ன்னு சொல்லி கட் பண்ணிட்டார்..
நான் உடனே கவுந்தடிச்சு படுத்தும் தூக்கம் வரலை.. அலாம் வெச்சுண்டும் எழுந்து எழுந்து பார்த்தும் விடியாததால் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். கடைசியில 6.10க்கு எழுந்தேன்.. வேகமா ஃபில்டர் போட்டு வெச்சுட்டு பல்லை தேய்ச்சுட்டு மறுபடியும் படுத்தேனா.. அப்படியே சொர்க்கமா தூக்கம்.. ஆஹா.. ரங்குவின் பஸ் அப்படியே கும்மிடிப்பூண்டி வழியா ஆந்திரா போயிடுத்துன்னா நாளைக்கு நைட்டு தான் வருவார்ன்னெல்லாம் இனிய கனவு..
கடைசியில் 9 மணிக்கு டாண்ணு ரங்கு வந்துட்டார். மேலேயும் கீழேயும் பார்த்தார், ”என்ன இன்னும் குளிக்கலையா?”ன்னு ஒரு லுக் விட்டார். எனக்கு  வந்த கோபத்துக்கு ”நீங்க ஏன் நேத்திக்கு மத்தியானமே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை?  நான் ராத்திரி ஃபுல்லா தூங்கவேயில்லை தெரியுமா? இப்போத்தான் எழுந்திரிச்சேன்.. முடியவேயில்லை”ன்னு ஓன்னு அழுதுட்டேன்.. ”போனாப்போறது.. ஏன் கரையராய், நேக்கம்மா கிடையாது அக்கா கிடையாது தங்கை கிடையாது, ஆருங்கிடையாது”ன்னு ரங்கு தன் பழைய பல்லவியை ஸ்டாட் பண்னி  லவ் டாக்ஸ் ஆரம்பிச்சர் . அப்போத்தான் நான் அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டேன் - ”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப்? “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா”- வந்ததே எனக்கு கோபம் - “எதுக்கு?  ஒரே நாள்ல திரும்பி வரதுக்கா? கார்த்தால ஃப்ளைட்டுல போயிட்டு இறங்கின உடனே, அது எப்படித்தான் சாத்தியமோ,  என்ன மாயமோ உங்களுக்கு போன வேலையெல்லாம் அரை மணியில் முடிஞ்சுடும், உடனே ஆத்துக்கு போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு புறப்பட்டு டொட்டடோய்ன்ன்னு இங்கே வந்து நிப்பேள் இல்லையா?”ன்னு கேட்டேபுட்டேன்.

Thursday, April 25, 2013

எக்மோர் மியூசியம் தியேட்டரில் சுஜாதா வந்திருந்தார்- இருக்காதா பின்னே? சுஜாதா is God அல்லவோ?

தலைப்பு கொஞ்சம் நீளமோ? பரவாயில்லை... இருந்துட்டு போகட்டும்!
நேத்திக்கு கார்த்தால, எப்பவும்  போல பக்கித்தனமா ட்ரெஸ் பண்ணிண்டு அஃபீஸுக்கு வந்தேன். ஆஃபீஸ் மெயில் ஓப்பன் பண்றேனோ இல்லையோ முகப்புத்தகம் முதல்லே ஓப்பன் பண்ணிடுவேனாக்கும். நெக்ஸ்டு ஜி மெயில், ஸ்கைப், இப்படி ஆஃபீஸுக்கு அத்தியாவசிய பல அப்ளிகேஷன்களை எல்லாம் திறந்துட்டு கடைசியா போனாப்போறதுன்னு ஆஃபீஸ் மெயிலை திறப்பது வழக்கம். (சில நாள் திறப்பதே கிடையாது.)

நேத்திக்கும் அப்படித்தான் 'எங்கள் ப்ளாக்’ கெளத்தமன்ஜி நாடக ரசிகர்களுக்குன்னு போட்டு, கடவுள் வந்திருந்தார் நாடகத்தை பத்தி போட்டிருந்தார். நேரம், இடம் எல்லாம் பார்த்துண்டேன். உடனே ரங்குவை ரிக்வெஸ்ட் பண்ணேன்.இவருக்குத்தான் இந்த ’ஈள் பூள்’ அழுகை மெகா சீரியல் எல்லாம் இஷ்டமாச்சே? அதுனால ”ஃபேமிலி சப்ஜெக்டாம்ன்னா”ன்னு சொல்லி வெச்சேன். பின்னே மடிசார் மாமியெல்லாம் இருந்தா ஃபேமிலி சப்ஜெக்ட் தானே?

இவர் தான் எங்கேயும் சாமான்யமா கிளம்ப மாட்டாரே! நாற்காலியில் பிஷின், காதுல  ப்ளூடூத்தில் பிஷின், கையில் Laptop / Tab / Smart Phone ஆகியவற்றுடன் பிஷின். என்னத்த சொல்ல? ஆனாலும் அவருக்கு என்னை எங்கேயும் கூட்டிண்டு போறதில்லைன்னு ரொம்ப குறை. அதுனால சட்டுன்னு ஒத்துண்டுட்டார்! எனக்கே ஆச்சரியம்! 

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடக வடிவில் பாதி படிச்சிருக்கேன்.  அதை அசை போட்டுண்டே எக்மோரில் இறங்கி நடக்கலாம்ன்னு தான் நினைச்சோம். ஆனா அங்கே இருந்த கடமை தவராத  போலீஸ்காரர், ”17ஈ பஸ் வரும் அதில் தான் போகணும், 10 நிமிசத்துல போயிரலாம்”ன்னு ரொம்பவே வற்புறுத்தினார்.விட்டா, எங்க கூட வந்து நாங்க அந்த பஸ்ஸில் ஏறறோமான்னு செக் பண்ணுவார் போல இருந்தது! சரின்னு ஒப்புத்துண்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கும் தியேட்டருக்கும் வெறும் 1.2 கிமி தான்னு கூகிள் மேப்பில் பார்த்தாச்சு, இருந்தாலும் வெக்கமே இல்லாம காலி பஸ்ஸுல உக்காண்டு போனோம். ரங்குவின் கடமை உணர்ச்சியால் நான் நெகிழ்ந்தேன். பின்னே? டிக்கெட்டெல்லாம் வாங்கினார்! 

மியூசியம் தியேட்டரில் போய் உக்காண்டப்போ ஜில்லுன்னு இருந்தது. படு அமைதி. அரங்கம் மெதுவாக நிரம்பிக்கொண்டு இருந்தது. யாரையும் தெரியாது. ஜஸ்டு நாடகம் பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா RVS அண்ணா குடும்பத்தோட வந்திருக்கார். மாதங்கியை சங்கீதா மன்னி தான் ஃபர்ஸ்ட் பார்த்தா. எல்லாரும்  அடுத்தடுத்த ரோக்களில் சேர்ந்து உக்காண்டோம். ஒரு ஃபேமிலியா உக்காண்டு பார்த்தாப்புல பார்த்து ரசிச்சோம். அதிலும் RVS அண்ணாவின் பெண்கள் படுசுட்டி. கூர்மையா கவனிச்சுண்டு இருந்தார்கள். 

இப்போ நாடகத்தை பத்தி: 

நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன். நாடகம் முடிஞ்சப்போ திரு பாரதி மணி அவர்களுக்கு Standing ovation கொடுத்திருக்கணும்ன்னு தோணித்து. Hats off to his efforts! இதெல்லாம் பண்றது சாதாரண விஷயம் இல்லை! சொந்தக்காசு போட்டு ஆஃபீஸுக்கு ஒரு பேனா வாங்கினாலே ரீஇம்பர்ஸ்மெண்ட் கேட்கும் இந்த கால கட்டத்துல, கைக்காசு போட்டு நாடகம் நடத்தறது, அதுவும் இப்போ இருக்கும் விலைவாசிக்கு, க்ரேட் சார் நீங்க! அம்ஜத் அப்படீங்கறவருக்கும் இதில் நிறைய பங்களிப்பு இருக்கு. வாழ்க!

பாரதி மணி அவர்கள், தன்  அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். ஒரு டிப்பிகல் மிடில் க்ளாஸ் அச்சு பிச்சு மாமாவாக அருமையாக நடித்திருந்தார். நான் அமரர் பூர்ணம் விசுவனாதன் அவர்களின் டிராமாவை பார்த்ததில்லை. 

வரிக்கு வரி Stand up comedian மாதிரி அவரின் டயலாக் டெலிவரியும் எக்ஸ்ப்ரெஷனும், சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்தது. அவருடைய மனைவியாக வரும் பத்மஜா மாமியும் அடிபொளி, அச்சு அசலாக அந்த கதா பாத்திரத்தில் பொருந்துகிறார். 

சுந்தராக வந்த பையன் படு சூட்டிகை. சுந்தரின் துறுதுறுப்பும், மாறும் முகபாவங்களும் படு சுவரஸ்யம்! Remember, there are no closeup shots in a drama! இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணினால் பிராமண பாஷையும் சுலபமா கத்துண்டுடலாம். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

 தசாவதாரத்தில் வரும் பல்ராம் நாயுடுவைப் போல கதாநாயகி வைஷாலி தமிழ் பேசினாலும், நல்ல எக்ஸ்பிரஷன்களால் நம்மை கவர்கிறார். She needs to work on her Tamil spoken skills. Not a big deal I guess.

ஜோ என்னமொ நம்ம பக்கத்தாத்து பையனாட்டம் படு ஜோவியலாக சீனு மாமாவின் வீட்டில் உலாத்துகிறார் அப்படியே நம் மனதிலும் தான்!லேசாக சுஜாதா ஜாடை வேறு!

டாக்டர், இன்ஸ்பெக்டர், பேய் விரட்டுபவர், ஏட்டு, சேஷகிரிராவ், ராமமூர்த்தி, அவர் அப்பா எல்லாருமே கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்கள். 

அந்த நிச்சியதார்த்தப் படலம் = a huge laugh riot! என்னதான் தலைவர் எழுதியிருந்தாலும் அதன் execution எவ்வளவு முக்கியம் என்பதை நினைவு படுத்தியது. RVS அண்ணா - நீங்க சேஷகிரிராவாக நடித்திருந்தாலும்  ஜோராக இருந்திருக்கும்! இதில் நடித்தவருக்கும் நல்ல Comical features. அந்தக்கால விகடனில் போடுவார்களே குடுமி வெச்சுண்டு ஒரு கார்டூன் அதே ஜாடை! அவரைப்  பார்த்தாலே சிரிப்பு பொத்துண்டு வரது. குடு குடுன்னு பஞ்சகச்சத்தை பிடிச்சுண்டு மேடையெல்லாம்  ஓடி சிரிப்புச் சரவெடிகளை கொளுத்திப் போடுகிறார். காட்சி முடியும் தருவாயில் லேசான வயிற்றுவலி, சிரிச்சு சிரிச்சு.

என்னுடைய கவலையெல்லாம் ரங்குவை பத்தி தான். நான் தான் சுஜாதாவின் விசிறி! இவர் இல்லையே.. என்ன நினைப்பாரோ, செய்வாரோன்னு ஒரே கவலை. ஃபேமிலி ட்ராமான்னு சொல்லிட்டு ஒரு ஈள் பூள் காட்சி கூட இல்லையேன்னு கேட்பாரோன்னு நினைச்சுண்டே வந்தேன். ஒவ்வொரு காட்சியின் முடியும் போது நன்னா இருக்கான்னு கேட்டுண்டே இருந்தேன். அந்த 2 மணி நேரத்தில,  ஒரு வாட்டி கூட கடிகாரத்தை பார்க்கலை, மொபைலை எடுக்கலை, SMS அனுப்பலை, ஈமெயில் பார்க்கலை, மிஸ்ட்கால்ஸ் செக் பண்ணலை! He was completely stuck to the play!

மாதங்கி, RVS அண்ணா, மாதங்கி அப்பா எல்லார்கிட்டேயும் பேசி சிரிச்சுண்டே பார்த்தேன். சுகானுபவம்!

இண்டர்வெல்லுக்கு சொல்லும்போது கூட ”எங்க காலத்துல இந்த உபாதையெல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக ஒரு 10 நிமிஷம் இடைவேளை”ன்னு எதிர்கால மனிதன் சொல்றச்சே படு சூப்பர்.. ஊபா.. ஊபா.. ஊபா...

”ஜோ, எங்கே சுந்தருக்காக ஒரு ஏப்பம் விடுன்னு சீனு மாமா கேட்க, ஜோ முயற்சித்து, வரலை”ன்னு சொல்வது, நச் சுஜாதா அக்மார்க் இல்லையோ?


சீனு மாமா, சுந்தர் & ஜோ மூணு பேரும் ப்ளான் பண்ணும் காட்சி முடியும் போது RVS அண்ணாவின் மானசா, ”ரெண்டு வாட்டி மணி அடிக்காமலே ஜோ போயிடுத்தே ”என்றாள் பளிச் மானஸா, வெல் டன்! வெரிகுட் அப்ஸர்வேஷன். 

RVS அண்ணா இண்டர்வெல்லில் வெளியே போயிட்டு வந்தப்போ யாருடனோ பேசிட்டு வந்தார். மாதங்கியிடம் நான் சொன்னேன்,” நிச்சியம் அவர் பிக் ஷாட்டாத் தான் இருக்கும் பாரேன்”னு.” யார் அவர்?”ன்னு அப்பாவியா கேட்டா, நான் சொன்னேன், ”தெரியாது அண்ணா வரட்டும் கேட்கலாம்”ன்னு. மாதங்கி என்னை ரொம்ப கேவலமா பார்த்தா.. ”யார்ன்னு தெரியாமலேயே பில்டப்பா”ன்னு ஹி ஹி. அப்புறம் அண்ணா வந்தப்புறம் தான் தெரிஞ்சது அவர் ப்ரியா கல்யாணராமன் குமுதம் குழும எடிட்டர்! நான் தான் சொன்னேனோல்லியோ? :) 

நேத்திக்கி கார்த்தால திண்டுக்கல் தனபாலன் அனுப்பின ஏதோ ஒரு லின்கில் போலிச்சாமியார்கள் பத்தி படிச்சுண்டு இருந்தேன். ஆனா கண் முன்னே நிதர்சனமா சில உண்மைகளை புரியறமாதிரி சொன்னது எனக்கு double impact! கடவுளாக இருந்தாலும் இருக்கலாம்ன்னு நான் அரை குறையா நினைச்சவர் உண்மையில் பெரிய hoax என்பது மனதை மிகவும் பாதித்த விஷயம். அதை ஊர்ஜிதப்படுத்தியது இந்த நாடகம்! சுஜாதாவோ, சீனு மாமாவோ, சுந்தரோ, லக்ஷ்மி மாமியோ.. உண்மை இதுதான்னு புரிஞ்சது இல்லையா? ஒரு 20% எனக்குள் இருந்த அசட்டு நம்பிக்கைக்கு சரியான சாட்டையடி!

”அப்போ உண்மை சொன்னேன், எல்லோரும் பைத்தியம்ன்னு சொன்னா, இப்போ பொய் சொல்றேன், கடவுள்ன்னு சொல்றா! ”Ironic, but how very true! 

 கடவுளா இருக்கும்போது, சொம்பில் விபூதி வரவழைப்பது, 4 வருஷத்துக்கு ஒரு வாட்டி மேஜிக் பண்ணி காட்டிக்கலாம்ன்னு சுந்தர் சொல்வது,” நிறைய நல்ல விஷயங்களுக்கு நிதி பயன்படுறது” எல்லாமே - it rings a bell. doesn't  it? இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, Nothing was missed at all. Every single dialogue made an impact! 

”இவன் இங்க்லீஷுல ஏமாத்தறான், அவன் தமிழ்ல ஏமாத்தறான்”னு டாக்டரையும் பேய் விரட்டுபவனையும் சொல்வது சுஜாதாவின் டிப்பிகல் நையாண்டி! அதே மாதிரி டாக்டரே, சீனு மாமா கடவுள்ன்னு ஊர்ஜிதப்படுத்திண்ட உடனே, ”எனக்கு 6 வருஷமா குழந்தையில்லை”ன்னு சரண்டர் ஆறது = ultimate class!

பாரதி மணி சார், நீங்க இன்னும் நூறாண்டு வாழ்ந்து, உங்க ட்ரூப்போட  நிறைய நாடகங்கள் போடணும் சார்.Of course with due sponsorship. இவ்வளவு சிறப்பான நாடகத்தை இலவசமா பார்த்த குற்ற உணர்ச்சியிலிருந்து நாங்க விடுபட சீக்கிரமே இன்னொரு நாடகம் போடுங்க.. காசு கொடுத்து தான் பார்ப்போம். இது சத்தியம்! 

எக்மோர் மியூசியம் ஹாலுக்கு போனப்போ ரெண்டு கேட் இருந்தது, மெயின் கேட் மாதிரி தெரியலை. வரும்போது ரங்கு அதே கேட் வழியா போயிடலாம் ஷார்ட்(!!) அப்படீன்னு சொன்னார். எனக்கு அந்த ஐடியா அவ்வளவா பிடிக்கலை. அவ்ளோ தூரம்(!) போயிட்டு பூட்டி இருந்தா கஷ்டம்ன்னு சொன்னேன். சரின்னு மனம் மாறிட்டார். நான் நம்ப முடியாமல், ”எப்படின்னா?”ன்னு கேட்டேன், ”ஒரு வேளை அந்த கேட் பூட்டியிருந்தா நீ அதை வீட்டுக்கு வர வரைக்கும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி காட்டுவே”ன்னு சுஜாதாவால் எழுதப்பட்ட சீனு மாமாவின் அதே டயலாக்கை எடுத்து விட்டாரே பார்க்கலாம்!  நான் சொன்ன மாதிரியே அந்த உபரி கேட்டு பூட்டித்தான் இருந்தது. இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!
Related Posts with Thumbnails