Pages

Friday, April 22, 2011

வாட் ஆஃப் எ பல்பு டே!!!

ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன். ஹய்யான்னு சொல்றவங்களுக்கு நன்றி! அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) I am back guys!

எல்லாரும் சுகமா? ரொம்ப நாளாச்சு இல்லையா? நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து. (எளுதிட்டா மட்டும்!!) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை! அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது?)

சென்னை வந்து சுமார் நாலு மாசம் ஆச்சு. இன்னும் முழுசா செட்டில் ஆகலை. நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இந்தப்பதிவு எழுத என்ன காரணம்?

நமக்கு ஒரு நேரம் பல்பு கிடைக்கலாம். சில சமயம் ஆஃபீஸ் சில பல பல்புகள் கிடைக்கலாம்.. சரி சரி... மேக்ஸிமம் ஒரு நூறு? சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ?) ஆனா... ஒரு நாள் பூரா பல்பா... கடவுளே.. என்ன  சோதனை?

டூவீலரில் ஆஃபீஸ் போகும் நான்,தினப்படி 100 ரூபாய்க்கு பெட்ரோலை முழுங்கும் அந்த வண்டியை தட்டிக்கொடுத்து ஓட்டுவதுக்குள்ளே பொன்னர் சங்கர் படத்துக்கு பத்து வாட்டி போயிட்டு வந்தாப்புல ஒரே சலிப்பு. ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது.. இதுக்கு போடும் பெட்ரோல் எல்லாம் மெட்ரோ வாட்டர் லாரியில் இருந்து ஒழுகும் தண்ணி மாதிரி எங்கே தான் போகுமோன்னு ஆச்சர்யப்பட வைக்கும்.

சரின்னு இன்னிக்கி மனசைத்தேத்திண்டு,  (ஊழ்வினை தூண்ட), ஒரு நாளைக்கி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போய்த்தான் பார்ப்போமேன்னு தோணித்து. பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... ஒரு பஸ் இல்லை. நஞ்சுபுரம் ஓடும் தியேட்டர் மாதிரி பாஸஞ்சர் வறட்சியா ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுண்டு இருந்தது. நேக்கு தான் ஷேர் ஆட்டோவைக்கண்டா டாம் அண்டு ஜெர்ரில வர்றா மாதிரி தோளுக்கு பின்னாடி ரெண்டு இறக்கை முளைச்சுடுமே! என்ன ஒரு செளக்ர்யம்ன்னு பல்லிளிச்சுண்டே ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்.


அவன் என்னடான்னா வொய்ட் போர்டு பஸ்ஸை விட மஹாக்கேவலமா ஓரஞ்சாரம், இண்டு இடுக்குல இருந்து பாஸஞ்சர் வெள்ளம் வந்து இவன் ஆட்டோவுல ஏறுவான்னு மைண்டு மில்க் குடிச்சுண்டே 10ல ஓட்டிண்டு வந்திருக்கான். மஹாபாவி, கடங்காரா, வேகமா போடான்னு உறக்க, மனசுக்குள்ளேயே திட்டிண்டு வந்தேன். என் BP ஏத்தறதுக்குன்னே மூணு சிக்னல், ஒரு ட்ராஃபிக் மாமா வேற கடக்க யாருமே இல்லாத ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக கைகாட்டி எங்களை நிக்க வெச்சார். சார், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையான்னு கேட்கலாமான்னு தோணித்து.

வழக்கமா 10 நிமிஷத்துல போய்ச்சேரவேண்டிய கிண்டியானது சுமார் 25 நிமிஷமாச்சு. இருக்காதா பின்னே..

சரி அசட்டுத்தனம் பண்ணிட்டோம், எப்படியோ, பாதி தூரம் வந்தாச்சே இனி சீக்கிரம் போயிடலாம்ன்னு மனசை தேத்திண்டேன்.


PP21 போன்ற பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இருக்கும்போது “ ஏ அட்யார் அட்யார் அட்யார்”ன்னு காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டே ஒரு ஷேர் கார்(ச்சே ச்சே.. இவன் நல்லவன்.. ஷேர் ஆட்டோ தான் ஸ்லோன்னு என் உள்மனசு சொல்ல ஆரம்பிச்சுடுத்து)மூணு பேர் உட்கார்ந்திருக்க, நான் நாலாவதா போய் ஜாயின் பண்ணிண்டேன்.

என்ன கொடுமையோ, கஷ்டகாலமோ தெரியலை, அவன் அட்யார் அட்யார்ன்னு சவுண்டு கொடுத்த அளவுக்கு ஆட்கள் வந்து ஏறலை. அதுனால, தேர் கிளம்பலை பார்த்துக்கோங்க..10 நிமிஷம் நான் கிளம்பிடும்ன்னு பாசிட்டிவ்வா சிரிச்ச முகத்தோட உட்கார்ந்திருந்த சுப மூஹூர்த்தத்தில் 5 பஸ் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வந்துட்டு போயாச்சு.. இஞ்சி தின்ன குறங்கு மாதிரி என் முகம் மாற ஒரு ரெண்டு மூணு நாலு ஐஞ்சு ஆறு வாட்டி வாட்சு பார்க்க ஆரம்பிச்சேன். (அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்) அவன் எதையும் கண்டுண்டதா தெரியலை.
ஒரு நொடிப்பொழுதில் மனம் வெறுத்து, மெதுவாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்ன்னு விருட்டுன்னு இறங்கி வந்துட்டேன். அதான் சில நிமிஷங்களிலேயே 5 பஸ் வந்ததே.. இதோ இப்போ ஆறாவதும் வந்துடும் பாருன்னு என் உள்மனசு சொல்லிண்டே இருந்ததா... பார்த்தா ...வழக்கம் போல  வேற ஏதேதோ பஸ்கள் வந்துட்டு போயிடுத்து.

ஒரு மாதிரி பதபதைப்பா இருந்த என் மனசு, ஷேர்கார் இருக்கான்னு ஒரு செக்கண்டு செக் பண்ணிண்டது.. ஏன்னா இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம ஒரு மாதிரி ரெண்டுங்கெட்டானா போயிடுமே!

ச்சே.. என்ன ஒரு தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுண்டே இருந்தேனா.. 21G வந்தது. ஆஹான்னு அந்த ஷேர்காரை இளக்காரமா பார்த்துண்டே ஏறிட்டேன். ஒரு மிக முக்கியமான செய்தி, சின்னமலை போனப்போதான் உதயமாச்சு. 21G மத்யகைலாஷ் போகாதே. அவன் தான் கோட்டூர்புரத்துக்கு லெஃப்டு கட் பண்ணிடுவானே! என்ன ஒரு முட்டாள்தனம்! (இதுல நான் விட்டுட்டு வந்த ஷேர்கார்க்கு இளக்கார லுக்கு வேற) . கண்டக்டரிடம் கேவலமா திட்டு வாங்க மனசில்லாம ஒரு காந்தி மண்டபம்ன்னு டீஸெண்டா கேட்டு வாங்கிண்டேன். வண்டி மட்டும் இருந்தான் இன்னேரம் பார்க் பண்ணிட்டு ஆஃபீஸ் எண்டர் பண்ணியிருக்கலாமேன்னு வருந்திண்டே காந்தி மண்டபத்துல இறங்கினேன்.

பின்னாடியே 23ஸீ வந்ததா.. ஹைய்யான்னு குதிச்சு ஏறிட்டேன். மத்யகைலாஷூக்கு 2.50 ரூபாதானான்னு உச்சி குளுந்தேனோயில்லையோ... பஸ் நான் இறங்க வேண்டிய மத்யகைலாஷ் சிக்னல் தாண்டி (!!!) கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டாப்பிங்கில் இறக்கி விட்டுடுத்து.

ஷேராட்டோ, ஷேர் கார், ரெண்டு பஸ், இப்போ நடராஜா சர்வீஸான்னு நினைச்சுண்டே திரும்பவும் மெகா பல்புடன் வந்த வழியே ரோடு க்ராஸ் பண்ணி நடந்து வந்து கஸ்தூர்பா ஸ்டேஷன் வாசல்ல நின்னா, வழக்கம்போல என் ராஜயோக ஜாதக மஹிமை, ஒரு பஸ் இல்லை.

இந்த 5C பஸ் இருக்கே அது, “ வரும். ஆனா வராது”  டைப்பு பஸ். கூட பணிபுரியும் தோழி ”நிறைய ஷேர் ஆட்டோ இருக்குங்க”ன்னு சொன்னதுமேல நேக்கென்னமோ அப்படி ஒரு அபார நம்பிக்கை! ஒரு ஷேர் ஆட்டோ எனக்கே எனக்கா காத்திண்டு இருந்ததா.. அதுல அசுர வேகத்துல ஏறி உக்காந்துட்டேன். (இன்னுமா நீ திருந்தலைன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது) என் கூட இன்னும் ரெண்டு பெண்களும் அதுல வந்து உக்காண்டா.

ஆனா, அந்த ட்ரைவர் ப்ரும்மஹத்தி, வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன். எனக்கா செம்ம காண்டு. ஏ முட்டாப்பலே.. மணியாச்சுடா.. போகணும்டா.. வண்டி எடுறான்னு சத்தம் போட்டு மறுபடியும் மனசுக்குள்ளேயே திட்டிண்டேன்.

அப்புறம் ஒரு வழியா ரெண்டு எக்ஸ்ட்ரா பேஜஞ்சர் வந்தாங்களா, ஹப்பாடி எடுப்பான்னு ஒரு நம்பிக்கை பிறந்தது. திடீர்ன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பெண்கள் ஏய் இறங்குடீன்னு கத்திண்டே இறங்கிட்டாங்க.
எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.

இன்னும் இதை நம்பிண்டு உட்கார்ந்திருந்தா ஷிஃப்டு முடியுற சமயத்துல தான் ஆஃபீஸ் போய்ச்சேர முடியும்ன்னு தெரிஞ்சு நானும் அசுர வேகத்துல ஷேர் ஆட்டோவில இருந்து இறங்கிப்பார்த்தா 5T மெஜெஸ்டிக்கா வந்து நிக்கறது. ஓடிப்போய் அதுல ஏறிட்டேன்.

”இத்தனை நாள் நாம ஆஃபீஸ் வந்திருக்கோமே, என்னிக்காவது இந்த 5T யை பார்த்திருக்கோமோ? அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ? அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா? ”ன்னு கவலைப்பட்டுண்டே, பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C!!!! ”சார் ப்ளீஸ் நெக்ஸ்டு ஸ்டாப்புக்கு அர்ஜெண்டா ஒரு டிக்கெட் குடுங்க”ன்னு கேட்டு அவசரமா டிக்கெட் வாங்கி ஸ்டாப்புல இறங்கி ஓடி வந்து அந்த பஸ்லே ஏறிண்டேன். ஹப்பாடி.. என்ன ஒரு நிம்மதி!

ஒரு வழியா ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன்.

” எப்படி விஜி நீங்க தினசரி நம்ம ஏரியாவுல இருந்து இங்கே வர்றீங்க?சரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்கு?”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே!!!!!!” அப்போ நான் தான் கேக்கலையா? கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு! ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.

ஆச்சா.. இன்னும் முடியலை. இருங்க. மதியம் சாப்பிடலையா.. செம்ம பசி. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது வெற்றிக்கொக்கரிப்போட 5Cயை பிடிச்சு, மத்யகைலாஷ் வந்து இறங்கி, CIT நகர் போகலாம்ன்னு நினைச்சு 5S - சைதை தி நகர்ன்னு போட்ட ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். இது எப்படியும் தப்பாதுன்னு மனசுக்குள்ளே ஒரு பரிஹாஸ சந்தோஷம் கொப்பளித்தது.
கோட்டூர்புரம் வரையில் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு பஸ் கோட்டூரில் திரும்பிடுத்து. அய்யய்யோ.. இன்னும் கொஞ்சூண்டு முன்னாடி போய் வலது பக்கம் திரும்பினா சைதாப்பேட்டை.. இவன் எங்கே போறான்ன்னு ஒரே யோசனை. இங்கே திரும்பிடுவானா இருக்கும், அங்கே திரும்புவான்னு பார்த்துண்டே இருக்கேன்.. கழுதை பரதேசம் போனாப்புல பஸ் காந்தி மண்டபம் ரோடு முழுவனும் போய், ஊரெல்லாம் சுத்தி கடைசியில் நந்தனம் சேமியர்ஸ் ரோடு வந்து, சைதை வந்து சீஐடி நகர் வந்தது! ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது! என்னே ஒரு அதிநவீன ரூட்டு. இதை அப்படியே மெயிடயின் பண்ணிக்கோங்கப்பான்னு சொல்லலாம் போல வந்தது.


ஆக மொத்தம்.. ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு. வாட் ஆஃப் எ பல்பு டே!



இதுல இருந்து நாம கத்துக்கும் பாடம் என்னான்னா, கேட்டாலும் பல்பு, விவரம் தெரிஞ்சவங்க  கிட்டே விஷயம் கேட்காட்டாலும் பல்பு தான். 

Related Posts with Thumbnails