Pages

Wednesday, June 23, 2010

I am coming, Chennai....

அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,

இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.


(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!
சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். , ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)

சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)

என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)

 ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?




அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.


இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!

இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.


நீங்க என்ன சொல்றீங்க?

Friday, June 18, 2010

ஹரா பரா டெர்ரர் கபாப்

ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி இங்கே ரெஸ்டாரண்டுகளுக்கு போனால் ஸ்டார்டருக்கு இதான் ரங்குவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அடைக்கு ஊறவைத்து அரைத்தது போக கொஞ்சம் பாசிப்பயறு ஊறவைத்து வெள்ளி மாலை இந்த கபாப் பண்ணிக்குடுத்துடலாம்ன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். எல்லாம் சுய ரெஸிப்பீ தான். கொஞ்சம் ரெஸிப்பீஸ் பார்த்தா ஐடியா கிடைக்கப்போகுது!

கபாப்ன்னா நம்ம தமிழ்ல வடைன்னு அர்த்தம் போல இருக்கு. பச்சையா இருக்கும் இந்த ஹரா பரா கபாப். பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாய் எல்லாம் போட்டு ஜீரக வாசனையா இருக்கும். என்ன பெரிய பிரமாதம், வீட்டுலேயே பண்ணிக்குடுத்துடலாம்னு நினைச்சு தான் வேலையை ஆரம்பிச்சேன். காஃபியுடன் வடையை வெச்சு தந்தால் சந்தோஷப்படுவார்ன்னு மெதுவா கிச்சனுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். ஈஸ்வரோ ரக்ஷது!

முதல்ல லாப்டாப்பை கிச்சன்ல செட் பண்ணி ஒரு ரெசிப்பீ தேடி எடுத்துட்டேன். பார்த்தா, கீரையை சுடுதண்ணியில போட்டு, ஜில் தண்ணியில அலசி , பிழிஞ்சு, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைக்கணும். ஜிம்பிள்! அதுல பாருங்க ஒரே ஒரு ஸ்டெப் தான் மிஸ் பண்ணி இருக்கேன், மொத்தமும் கந்தரகோளம்!

எந்த ஸ்டெப்பா? அதாங்க அந்த பிழியற ஸ்டெப்தான். சுடுதண்ணீயில அலசிட்டு, ஜில்தண்ணியில போட்டு , வெளியில எடுத்து, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைச்சாச்சு.  அரைச்சுட்டு எட்டிப்பார்க்கறேன், கீரை மசியல் மாதிரி இருக்கு! செம்ம ஷாக்! சரி பார்க்கலாம். இன்னும் பாசிப்பயறு இருக்கே.. அதையும் கெட்டியா அரைச்சு பிசைஞ்சுட்டா கெட்டி பட்டுடும்ன்னு நம்பினேன்.


தண்ணி விடாம கரகரப்பா பாசிப்பயிறை அரைச்சாச்சு. பச்சை பட்டாணி கீரை விழுதோட பருப்பை போட்டுட்டு பார்த்தா மொத்தத்துல அது என்னமோ அடை மாவு மாதிரி இருக்கு!!!

சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.

கவனமா எல்லா மசாலாவும் சேர்த்தேன். உப்பு போட்டு கடைசியா கரண்டி போட்டு கிண்டி பார்த்தேன். அதே அடை மாவு கன்ஸிஸ்டென்ஸியில இருக்கு! சூஃபர்!

இனி இதை எப்படி கெட்டியாக்குறது? மெள்ளமா கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தேன். அடை மாவு ரெண்டு கரண்டி அரிசி மாவை விழுங்கிட்டு கள்ளூளிமங்கன் மாதிரி அப்படியே இருந்தது. சரி வேணா கொஞ்சம் சுவைக்கு கடலைமாவு போட்டா என்ன? எப்படியும் பருப்புக்கள் தானே சேர்த்திருக்கோம்.. ஒரு டேஸ்டு என்ஹான்ஸரா இருக்காது? இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் இன்னொருத்தி பொறந்துதாண்டீ அநன்யா வரணும். உன்னை மிஞ்ச முடியுமா?ன்னு சந்தோஷமா க.மாவையும் கலந்தாச்சு.. மறுபடியும் கள்ளூளிமங்கன் ஹரா பரா அடைமாவு விழித்தது.. ஒரு நிமிஷம், என்னை விட்டூடு அநன்யான்னு கெஞ்சித்து! ஹ.. என்னிடமா நடக்கும்ன்னு வீர வசனம் பேசிண்டே ஒரு ஸ்பூனால அடை மாவை எடுத்து அரிசிமாவில் போட்டு பிரட்டி,  எண்ணெயில் ஸ்ஸொயீன்னு போட்டு பொறிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அசப்புல பார்க்க அது பச்சை அடை உருண்டை மாதிரியே தான் இருந்தது. ஆனா கரகரன்னு இருக்கவேண்டாமோ? அதென்னமோ சவுக் சவுக்ன்னு இருந்தது. பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! (ஹிஹி, இவனை வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு!)ஹாம்.. அதுக்கு கொடுத்த வெச்சது அவ்ளோதான்னு மனசைத்தேத்திண்டு பாக்கி எல்லாத்தையும் இதே மாதிரி பொறிச்சுடலாம். இனி இதுக்கு அலங்காரம் பண்ணி மாளாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

இதுக்குள்ளே ரங்கு மூக்குல வேர்த்து கிச்சனுக்கே வந்துட்டார். என்னம்மான்னு ரொம்ப ஆதரவா கேட்டார். எனக்கு அழுகை முட்டிண்டு இருந்தது.  இவ்ளோ ரகளை பண்ணினதுனால கிச்சன்வேற குருக்ஷேத்திரம் மாதிரி ஒரே களேபரமா இருந்தது! வடையும் சொதப்பல் கிச்சனும் கொடூரமா இருந்ததுனால ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். அவர் கிட்டே நடந்ததை சொன்னேன்.

உடனே நம்ம ரங்க்ஸ், இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க? ச்சீ அசடுன்னு(உண்மையைச்) சொல்லி, ஒரு ஹைலி அப்ஸார்பண்ட் டிஷ்யூவை கிழித்து ஒரு தட்டுல வெச்சு அ.மாவை அதில் கொட்டினார். ஏதோ ஒரு படத்துல போண்டா மணி,”மாப்ளை சீப்பை திருடிட்டேன், அவர் எப்படி தலை வாருவார், எப்படி தாலி கட்டுவார்”ன்னு கேப்பாரே அதே பீலிங்கி தான் வந்தது! உஸ்ஸ்ன்னு நினைச்சுண்டே, ”வேற உருப்படியா ஏதாவது ஐடியா தர்றேளா”ன்னு கேட்டேன்.

உள்ளே போய் ஒரு பத்து நிமிஷம் தேடி ஒரு பழைய மயில்கண் வேஷ்டியை கொண்டு வந்து கோமணம் மாதிரி நீளவாக்கில் கிழிச்சார். என்னத்துக்கு இப்படி கிழிக்கறேள்ன்னு கேட்டுண்டே இருக்கேன், உஷ்.. உனக்கு தெரியாது.. இப்போ பார்ன்னு கோ. துணியை சின்க் கிட்டே விரித்து, ஒரு சல்லடையையும் எடுத்துண்டு இந்த அடைமாவை மொத்ததையும் அதில் கொட்டி, அதை சுருட்ட ஆரம்பிச்சார்.

மெதுவா என் ப்ளட் பிரஷர் ஏற ஆரம்பிச்சது.. அதிக தண்ணியை பிழியும் முயற்சியில் ஒரு கரண்டி மாவு சல்லடையில் விழுந்தது. அந்த துண்யின் விளிம்பு ஓப்பன் ஆகி, மாவு வெளியில் பிதுங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டாப்பிட்”ன்னு காதலன் நக்மா மாதிரி கத்திட்டு, அவர் கிட்டே இருந்து அந்த துணியை மாவுடன் வாங்கி அவரை சபை நீக்கம் பண்ணினேன்.

மெதுவா பார்த்து தேங்காய்ப்பால் எடுக்கறமாதிரி எக்ஸஸ் வாட்டரை எடுத்தேன். அந்யாய பொறுமை வேணும் இதுக்குன்னு தோணித்து.. யப்பா.. எவ்ளோ நேரம் மாவும் வெளியேறாம கர்ம சிரத்தையா பண்றது!  அப்புறம் கட்லெட் மாவுமாதிரி கெட்டியா கிடைச்சது. அந்த கபாப்ஸை பொறிச்செடுக்கறதுக்குள்ளே என் தாவு தீந்துடுச்சு!

கிச்சனை க்ளீன் பண்ணிட்டு, எடுத்த 108 பொருட்களை யதாஸ்தானம் பண்ணிட்டு கபாப்ஸுடன் சூடான காப்பியை எடுத்துண்டு ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6! என்ன ஒரு சோதனை!

இவர் உடனே, ”உனக்கு எப்போ என்ன டவுட் இருந்தாலும் உடனே என்னைக்கேளு.. நான் மட்டும் இன்னிக்கி இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!”ன்னு ஓவரா பில்டப்பு ஸ்டார்ட் பண்ணிட்டார்! இங்கே ஒரு முக்கியமான பாயிண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த ரங்கு கிச்சனுக்கு வர ஒரே ஒரு காரணம் - விபூதி பாடி பேக் (Body pack) போட்டுக்கத்தான். இதுல பெரிய பெரிய டயலாக்ஸ் கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பிச்சுட்டார்!

“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..

கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க!

Monday, June 14, 2010

சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

இந்த டாப்பிக் பத்தி நானும் ரங்குவும் எங்கள் நீளமான அபுதாபி - துபாய் பயணங்களின் போது விவாதிப்பதுண்டு.

முதல்ல சிச்சுவேஷன்னா என்ன? படத்தில் ஒரு முக்கிய நிகழ்வை காட்டும் ஒரு அட்டவணை மாதிரி. இப்போ வரும் படங்களில் பெரும்பாலான படங்கள் டெம்ப்ளேட் சிச்சுவேஷன்களை யூஸ் பண்ணிண்டு இருக்கு. லைக் ஹீரோ இண்ட்ரோடக்‌ஷன், லவ் சாங், லவ் சாங், லவ் சாங், இன்னோரு இத்துப்போன லவ் சாங் கடைசியில க்ளைமாக்ஸ் கிட்டக்க வரும்போது ஒரு அரை குறை குத்து சாங் இப்படி வெச்சுண்டு இருக்காங்க.

சில வருஷங்களுக்கு முன்னாடி வரை, வழக்கமான லவ் சாங், பெத்தோஸ் சாங், அம்மா செண்டிமெண்ட் சாங், நாட்டுப்புற ஃபோக் சாங், ஜெயமாலினி சாங், தத்துவ சாங் இதைத்தவிர தமிழ் சினிமாவுல வேற சாங்கே இல்லையா?ன்னு தமிழ்மக்கள் தவிச்சுண்டு இருக்கும்போது தான் சில வித்தியாசமான சிச்சுவேஷன்களிலும் சாங்ஸ் போடலாம்ன்னு ஒரு புதுமையான கான்செப்டு புகுத்தப்பட்டது.

மறுபடியும் சொல்லிடுறேன்.. இந்தப்பதிவு இசையைப்பத்தியோ பாடலாசிரியரைப்பத்தியோ, பாடகர்களைப்பத்தியோ இல்லை.. எந்த இடத்தில் பாட்டு புகுத்தப்படவேண்டும்னு இருந்த ஒரு விதிமுறையை தகர்த்தெறிஞ்சு, எங்களை கவர்ந்த சில பாடல்களைப்பத்தி மட்டுமே..

இப்படிக்கூட பாட்டுக்கள் சேர்க்கலாமோன்னு எல்லாருக்கு ஒரு ஞானோதயம் வந்ததுன்னு சொன்னா அது மிகையாகாது.தடுக்கி விழுந்தா பாட்டுன்னு இருந்த காலம் மாறினதே பெரிய பாடுதான்னாலும், கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரியான சிச்சுவேஷன் பாடல்கள் வர ஆரம்பிச்சப்போ கொஞ்சம் அலுப்புத்தான் தட்டித்து. ”வாத்யாரே, இப்போ பாட்டு வரும்பாரு”ன்னு ஜனங்க ஊகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இந்தப்புதுமையான சிச்சுவேஷன் சினேரியோவுல அனேகமாக முக்கால்வாசி எல்லாமே பாலச்சந்தர் கமலஹாசன் கூட்டணியில் வந்திருக்கும் இல்லாட்டி பாலச்சந்தர் படங்களிலா இருக்கும்.

இங்கே இந்தப்பதிவுல் நான் சொல்ல விரும்புவது என்னை மிக மிக கவர்ந்த சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்

அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா?
கம்ப்ளெயிண்ட் பண்ற நோக்கத்தோட எழுதப்பட்ட ஒரு அருமையான காமெடி பாட்டு. செளக்காரின துறு துறு நடிப்பும் ஸ்ரீகாந்தின் அசமஞ்சமான முகபாவங்களும் மிகவும் ரசித்தவை.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சினிமாவுல ஒரு ம்யூசிக் டைரக்டரும் ஒரு கவிஞனும் எப்படி ஒரு பாட்டை உருவாக்குறாங்களோ அதே மாதிரி இப்படி ஒரு தீம் வெச்சு,அதன் மூலமா கதாநாயகன் தன் லவ்வை சொல்றா மாதிரி கே.பி இந்த பாட்டை வடிவமைச்சார். புதுமையிலும் புதுமை. ஸ்ரீதேவியின் சூட்டிகையும், கமலின் நிஜக்கவிஞனுக்குரிய கற்பனாசக்தி நடிப்பும் அபாரம்! யாருக்குத்தான் இந்த பாட்டு பிடிக்காது. குலதெய்வம் கமல் காம்பினேஷன்ல அல்ட்டிமேட் பாட்டு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல இடம் பிடிச்சு இருக்கும்.


என்ன சமையலோ?
மறுபடியும் கே.பியின் உக்தி. சமையல் மட்டுமில்லாம அதுக்குள்ளே சங்கீதத்தையும் அழகா சேர்த்து அறுசுவை உணவா பரிமாறி இருப்பாங்க. அந்தந்த ராகம் பேர் வரும்போது அந்த ராகம் உபயோகிச்சு இருக்காங்க. அழகிய தமிழ் மகனில் வரும் வலயபட்டி தவிலே பாட்டுக்கு எல்லாம் இந்தப்பாட்டு தான் முன்னோடியா இருக்கும். இதே மாதிரி அகத்தியர் படத்துல ராவணன் வீணை வாசிச்சுண்டே பாடுற பாட்டு கூட சாலஞ்சிங் தான்னாலும் ஒரு வித ஜனரஞ்சகமான சிச்சுவேஷன் சாங் இது. இசைக்கு இசையாச்சு, காமெடிக்கு கமல் மனோரமா தாரா ஆச்சு. வரிகளை மட்டும் லேசுல விட்டுட முடியுமா என்னா? தன் பங்குக்கு கவிஞர் (வாலி???) புகுந்து விளையாடி இருப்பார். ம ஸ லா... கரம் மசாலா...  ப ப ப ப ப தா? பருப்பு இருக்குதா? த நி த நி த நி த நி தனியா இருக்கா? ஆஹா.. சூப்பர் வரிகள். சில சமயம் தேடி பார்ப்பதுண்டு. அவ்ளோ இஷ்டம். கமலின் வாழையிலை பெயிண்டு ஜோக்கு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணு.


கனாக்காணும் கண்கள் மெல்ல...
இந்தப்படம் ரொம்ப சின்ன வயசுல பார்த்த படம். ஒண்ணும் நினைவில்லை. போன வருஷம் ராஜஸ்ரீயில டவுன்லோடு பண்ணி பார்த்தப்போ இந்த பாட்டு வந்த சிச்சுவேஷன் என்னை ரொம்பவும் பாதிச்சது. ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட பொண்ணோட எண்ணச்சிதறல்களை அப்படியே படம் பிடிச்சு சொல்லி இருப்பார். இதமான வெல்வெட் குரலில் குலதெய்வம் பாடி இருப்பார். ஒருவர் மற்றவரை மிஞ்சும் நடிப்பு. புகழ வார்த்தைகளே இல்லை.



கவிதை கேளுங்கள் - இது புன்னகை மன்னனில் வரும் இன்னொரு வித்தியாசமான சிச்சுவேஷன் சாங். ரேவதியின் நடனமும், இளையராஜாவின் இன்னிசையும் வாணியின் குரலும் மெய்மறக்கச்செய்யும். அடிக்கடி கெடியாரத்தை காட்டி ராத்திரி பூரா டான்ஸ் ஆடுறான்னு சொல்லி இருப்பாங்க. என்னுடைய மிக முக்கியமான ஃபேவரைட்.




இதே மாதிரி இன்னோரு பாட்டு அழகன்ல மரகதமணி இசையில குலதெய்வமும் சந்தியாவும் பாடிய சங்கீதஸ்வரங்கள் பாட்டு. டி.வி தான் தீம். சாயந்திரம் பேச ஆரம்பிச்சு டெல்லி அஞ்சல் (9.00PM) இத்துடன் நிறைவு 11.00? டீவியில் கிரெய்ன்ஸ், அப்புறம் காலை 7 மணிக்கு மீண்டும் தூர்தர்ஷன் லோகோ வரும் வரை இவர்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் தொடருதாம். பாலச்சந்தரைத் தவிர வேற யாராலும் இந்த மாதிரி தின்க் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த மாதிரி உங்களைக்கவர்ந்த சிச்சுவேஷன் பாட்டுக்களை பற்றி எனக்கு இங்கே பின்னூட்டமாவோ அல்லது அழகா ஒரு பதிவாவோ தெரிவியுங்களேன்.

Wednesday, June 9, 2010

கிரேஸி கிச்சன் கில்லேடி!

அப்பாவி தங்கமணியின் இட்லி பதிவுக்கு முன்னாடியே இந்தப்பதிவு எழுத ஆரம்பிச்சு பிசுபிசுத்து போயிடுத்து. அதான் பிரசுரிக்காம விட்டுட்டேன்.

சில நாட்கள் சமையல் சமயம் சோதனை சமயம் ஆயிடுறது. ஆமா, என்ன பெரிய  சமையல் . இருக்கறது ரெண்டு பேர். என்ன பெருசா சமைக்க போறேன்?ஒரு சாம்பார் / ரசம் , ஒரு காய், கொஞ்சம் சாதம். ஒரு முக்கால் மணி நேர விஷயம். இதுக்கென்ன இவ்ளோ அலட்டல்ன்னு தானே கேக்கறீங்க?

நானும் அப்படித்தான் அலட்சியமா செய்யுற ஆளு. ஆனா பாருங்க ஒரு நாள் நல்ல ராஹூ காலம்+எமகண்டம் கூடிய சுபயோக சுபலக்னத்துல சமைக்க ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு, எல்லாமே தலைகீழ்.


ரங்கு சுபாவம் என்னன்னா, திடீர்ன்னு ஒரு மணிக்கு வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு 3.30 மணிக்குத்தான் வருவார். லேட்டாகும்மான்னு சொல்லி இருந்தார்ன்னா, 100% நிச்சியமா 12 மணிக்கே வந்து ஈன்னு பல்லிளிச்சுண்டு நிப்பார். ”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும்.

அதனால் ஆஃபீஸிலிருந்து ஃபோன் பண்ணி சொன்னால் எனக்கு ஹைய்யா ஜாலின்னு சொல்லி குதூகலிக்கற அளவுக்கு நேரம் இருக்கும். அப்புறம்  சமையல் என்ன பெரிய  சமையல் புடலங்காய்! ஈஸி மேட்டர்!

எப்போவுமே அவசரமா இருக்கற அன்னிக்குத்தான் பல கஷ்டங்கள் வரும். ஒரு நாள் கண்டினூவஸா ஒரே கஷ்டங்கள். எல்லாம் விதவிதமான கஷ்டங்கள்.

பருப்பை குக்கர்ல வெச்சுட்டு புளி ஊறப்போடுறதுக்கு புளி டப்பா எடுத்தா டப்பா காலி. இன்னிக்கித்தானா இது காலி ஆகணும். ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாலும் மொத்த சாமான்ல இருந்து அதை தேடி எடுத்து பாக்கெட் பிரிச்சு போட்டு... சில சமயம் கடுப்பா இருக்கும். ஆச்சு எடுத்து போடுறதுக்கு 5 நிமிஷம் போயிடுச்சு. இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க மேற்கொண்டு படிக்கவேண்டாம். ஏன்னா நான் அந்த டைப்பு லேதண்டீ... :))

நெக்ஸ்டு புளி ஊறப்போட்டு வேக வேகமா பீன்ஸ் ஆய்ஞ்சு நறுக்கியாச்சு. நறுக்கிட்டு கொஞ்சூண்டு வெந்நீர் விட்டு காயைப்போட்டு உப்பு மஞ்சப்பொடி போட்டுட்டு பார்க்கறேன் சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை! ஹய்யோ இந்த லைட்டர் தொல்லை தாங்கமுடியலைன்னு புலம்பிண்டே நேரா சுவாமி கிட்டக்க இருந்த தீப்பெட்டியை எடுத்துட்டு வந்து கேஸ் பத்த வெச்சா, கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு இருக்கு. கொஞ்சம் உத்து கவனிச்சப்போ உஸ்ஸ்ன்னு கேஸ் சவுண்டைக்காணோம். பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!

பீகாக் குரோஸரி நம்பர் தேடி எடுத்து அவனை புது சிலிண்டர் கொண்டு வரச்சொல்லிட்டு அதுவரைக்கும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்.

சரி புளி வெந்திருக்கும், கரைச்சுடலாம்ன்னு புளி கரைச்சு, அந்த கரைசலை ஈயசொம்பில் விட்டு பெருங்காயம், ரசப்பொடி, உப்பு, தக்காளி எல்லாம் போட்டு ரெடியா வெச்சேன். அப்போத்தான் பார்த்தேன் பருப்பு வெச்ச குக்கர்ல ஒரு விசில் கூட வரலை.அது எங்கேந்து வரும்? அதான் கேஸ் ஆஃப் ஆயாச்சே?

 சூப்பர். இன்னிக்கி  சமையல் பண்ணிடுவோமா?

ரைஸ் குக்கர்ல சாதம் வைக்கலாம்ன்னு பார்த்தேன்.ப்ளக் வெச்சு, தண்ணி விட்டு, செப்பரேட்டர் ல அரிசி கழுவி, ரெடி பண்ணிட்டு வெச்சு மூடினேன். ஒண்ணுமில்லாட்டி ஒரு வாய் தயிர்சாதமாவது சாப்பிட்டு போகலாமேன்னு ஒரு நப்பாசை.

அதுக்குள்ளே டிங் டாங் சத்தம். ஒரு நிமிஷம் ரங்கு தானோன்னு பயந்து நடுங்கி அப்புறம் இல்லே காஸ் சிலிண்டராத்தான் இருக்கும்ன்னு சுதாரிச்சுகிட்டு கதவைத்திறந்தேன். நம்ம ஹீரோ கடைக்கார பையன் வந்தாச்சு.

சிலிண்டரை மாட்டி கொடுத்தான். ஆன் பண்ணினப்போ கேஸ் சஞ்சீவனி மருந்து சாப்பிட்ட லக்ஷ்மணன் மாதிரி உயிர்த்தது! அப்பாடி நிம்மதி.

வேக வேகமா குக்கர் ஆன் பண்ணி ஹை ல வெச்சேன். ரைஸ் குக்கர் மேல ஸ்டீமரில் காயை வேகப்போட்டு, இன்னொரு கேஸில் ரசத்துக்கு கரைச்சு வெச்சு இருக்கும் ஈயச்சொம்பை ஏத்தினேன். இனி  சமையல் ஆயிடும்ன்னு திடமா நம்பினேன்.

பருப்புசிலிக்கி ஊறப்போட்ட து.பருப்பு நல்லா ஊறியாச்சு. சரின்னு எடுத்து மிக்ஸி ஜாரில இன்ன பிற சாமான்களுடன் போட்டு வெச்சு மிக்ஸி கேபிளை சொருகி, ஆன் பண்ணினேன். வழக்கமா டுர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் வரும் மிக்ஸி அன்னிக்கீன்னு பார்த்து சன் பிக்சர்ஸ் எடுத்த படத்தை பார்த்து நட்டு கழண்ட புதுப்பைத்தியம் மாதிரி ”உய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்”ன்னு சத்தம். கஷ்டம்.. வெளியில எடுத்துட்டு அடியில ஒரு டிஷ்யூ வெச்சு சுத்தமா துடைச்சுட்டு மறுபடியும் ட்ரை பண்ணேன். ”உய்ய்ய்ய்ய்ய்ங்க்” தான்.. கூடவே மைக்கேல் மதன் காமராஜனின் திருட்டுப்பாட்டி க்ளைமேக்ஸ் ல சொல்ற மாதிரி என்னது? கரியற நாத்தம்?ன்னு சொல்ற அளவுக்கு அந்த ஜாரின் அடிப்பகுதியில் என்னமோ ஸ்மெல்! சந்தோஷம்.. ரொம்ப டாங்கீஸ்ன்னு கீத்தா மாத்தா மாதிரி சொல்லிட்டு,  பாதி அரைபட்ட பருப்பை கையால வழிச்சு வேற ஒரு நீளமான ஜாரில் போட்டு அரைச்சேன். சமர்த்தா அரைச்சு கொடுத்துடுச்சு. ஒரு கிண்ணத்தில போட்டு காய் வெந்துகிட்டு இருந்த ஸ்டீமரில போடலாம்ன்னு ரைஸ் குக்கர் மூடியைத்திறந்தா சில்லுன்னு அப்படியே இருக்கு குக்கர்!

தூக்கி வாரி போட்டது. அய்யோ என்ன இது? இப்போத்தான் கேஸ் தீந்து போச்சு, இப்போ கரண்டும் தீந்து போயிடுச்சான்னு அதிர்ச்சியில ப்ளக்கை சரி பண்றதுக்கு எக்ஸ்டென்ஷன் பக்கத்துல போய் இழுத்து பார்த்தேன். சுரீர்ன்னு தோள் வரைக்கும் ஷாக் அடிச்சுடுச்சு.. சரியான எமகண்டத்துல தான் நாம  சமையல் ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் தாளிச்சு கொட்டறதுக்குள்ளே என்னெல்லாம் நடக்கப்போகுதோ, கடவுளேன்னு ஒரு ரூபா குலதெய்வத்துக்கு முடிஞ்சு வெச்சேன்னா பார்த்துக்கோங்க!

ரைஸ் குக்கர்ல கரெண்டெல்லாம் ஒழுங்காத்தான் வந்துகிட்டு இருந்தது. சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? ஹிஹி..அடிக்கடி கிட்னி யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும்ன்னு நினைச்சுகிட்டு, சுவிட்சு போட்டு ஆன் பண்ணி லைட்டு எரியுதான்னு பார்த்தேன். சமர்த்தா யெல்லோ லைட்டு வந்தாச்சு. அடுத்து என்னன்னு யோசிச்சேன்..

பருப்பு வெச்ச குக்கர் மெதுவா ரெண்டாவது விசில் வரவும், எப்படியாவது ரசம் நல்ல படியா அமையணுமேன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்த சமயம், டிங் டாங் சத்தம்! ரங்கு வந்தாச்சு!!  வயித்துல புளிக்கரைசல், அமிலக்கரைசல், பல வித பட்டாம்பூச்சிகள், போதாக்குறைக்கு பசியில எலிகள் எல்லாம் ஓடிச்சு. இவ்ளோ சொதப்பு சொதப்பிட்டு உனக்கென்ன பசி வேண்டிக்கெடக்குன்னு என் மனசாட்சி நாக்குல நரம்பில்லாம் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி திட்டினது.

ஓடிப்போய் கதவைத்திறந்தால் ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல முயற்சி பண்ணிண்டு இருந்தா. வாடீம்மா உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்னு நினைச்சுகிட்டேன். அரபியில் பேசினப்போ திரு திருன்னு முழிச்சேன். நான் இருந்த நிலமையில அந்த லேடி,   தமிழ்ல பேசியிருந்தாக்கூட புரிஞ்சிருக்காது போல இருந்தது. இல்லைன்னு கையால ஏதோ ஒரு சமிக்ஞை பண்ணிட்டு கதவை சாத்திட்டு மறுபடியும் கிச்சனுக்கு ஓடினேன். இவங்க வர்ற நேரத்தைப்பாரு.. க்கும். உஸ்ஸ்,..

மறுபடியும், இன்னிக்கி சமைச்சுடுவோமான்னு என்னை நானே கேட்டுண்டு அடுக்களைக்குள்ள புகுந்தேன். துளி எண்ணெய் விட்டு தாளிச்சுட்டு வெந்த காயும் பருப்பையும் வெதுப்பி எடுத்தாச்சுன்னா வேலை முடிஞ்சுடும். காய், பருப்பை எடுத்து வெச்சுட்டு, எண்ணெய்க்கிண்டியை பக்கத்துல எடுத்துண்டேன்.

அடுப்பை மூட்டிட்டு பின்னாடி திரும்பி அஞ்சரைப்பெட்டியை எடுக்கறதுக்குள்ளே, 'ட்டோய்ன்'னு ஒரு சத்தம். எண்ணெய்க்கிண்டி தானா குடை சாய்ஞ்சு ’ஞ’ன்னு கவுந்து கிடக்கு. கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது. துக்கம் தொண்டையடைச்சு, எம்பெருமானே, ஏன் இவ்ளோ சோதனைன்னு கதறி, சொல்லடி அபிராமின்னு கத்தினேன். அதாவது பாடினேன்.

எண்ணெய்க்கிண்டியை என்ன பண்ணினேன்? அது எப்படி விழுந்திருக்கும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண நேரமில்லை. சீக்கிரம்  சமையல் முடிக்கணும்ன்னு பர பரன்னு டிஷ்யூக்களை உருவி துடைச்சுட்டேன்.

க்ளிங்க்ளிங்ன்னு எஸ்.எம்.எஸ் வந்தது. ஆமா, ரொம்ப முக்கியம் இப்போ.. இந்த ஜாய் ஆலுக்காஸ், தமாஸ் இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது, நேரங்கெட்ட நேரத்துல இவங்க பண்ற லொள்ளை கன்ஸ்யூமர் கோர்டுல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேட்டே ஆகணும்ன்னு மனசுக்குள்ளேயே முணுமுணுத்துண்டு, தாளிச்சு காயைப்போட்டு, பருப்பையும் போட்டு திருப்பினேன். பீன்ஸ் பருப்புசிலி ஆச்சு,  சாதம் வெந்தாச்சு,  ரசம் நுரைச்சு, தாளிச்சுக்கொட்டியாச்சு.

ஒரு சொம்பு நிறைய தண்ணியை குடிச்சேன். மூச்சு வந்தது! அப்பாடீ! சோஃபாவுல போய் செளகரியமா உக்காந்து மொபைலை எடுத்துப்பார்த்தேன். ரங்கு தான்.
"Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "

Saturday, June 5, 2010

எண்ணச்சிதறல்கள்

கோவிலில் நல்ல கூட்டம். எந்தக்கோவில்ன்னு சரியாத்தெரியலை. உள்ளே நுழைந்ததும் ஜில்லுன்னு ஏசி, மக்கள் சலசலப்பு. கணீர்ன்னு தீபாராதனை காட்டிண்டு இருந்தாங்க. ஆஹா.. கற்பகவல்லித்தாயார். அப்போ இது மைலாப்பூராச்சே? மனமுருகி பிரார்த்திச்சுண்டேன். வழக்கமான பட்டர் தான். எனக்கு அரக்கு குங்குமமும் பூவும்  தந்தார். பிரகாரம் சுத்தும்போது தானா சப்தஸ்லோகி மந்திரத்தை வாய் சொல்லித்து. வெளீல வந்து பார்த்தா, அடேடே, இது மாங்காடு. ஆனா எப்படி உள்ளே கற்பகவல்லி இருந்தா? நடக்க ஆரம்பித்தேன். செருப்பு கவுண்டர் எங்கேன்னு தெரியலை. வரும்போது எங்கே வெச்சேன்னு தெளிவா நினைவில்லை. அப்படியே வெள்ளீசுவரையும்...

இன்னிக்கு பரீட்சை இருக்கு. ஆங், என்ன பேப்பர்? ஏன் தெரியவே மாட்டேங்குது? கொஞ்சம் பயம் இருந்தது. ரோட்டில் ஏன் இவ்ளோ கூட்டம்? எப்படி ஹாலுக்கு போறது? யாரோ துரத்துறாங்க. ஓடு ஓடுன்னு ஓடுறேன். நடுவுல பரீட்சை நினைவு. ஒரு அரைமணி நேரம் லேட்டானாலும் பரவாயில்லை, முடிஞ்ச வரை எழுதலாம். இவன் எதுக்கு நம்மை துரத்தறான்? பிரும்மஹத்தி. மூச்சிரைக்க ஓடுறேன். ஏதோ ஒண்ணு என் முதுகைக் கவ்வி பிடுங்கியது.

எனக்கு பிடிச்ச பிரம்பு நாற்காலி, 80களில் இருந்த ரவுண்டு பிரம்பு டீப்பாய். தந்தியாலா படங்களில் வருவது மாதிரி ராஜமுந்திரியோ வைஸாக்கோ இந்த இடம். நல்லா இருக்கு இல்லே? எனக்கே எனக்குங்கற மாதிரி போய் உக்காந்தேன். ஒரு சின்னப்பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான்.  ஹய்யோ.. இவன்.. இவன்... இவன் அந்த வீட்டு வேலைக்கார பையனாச்சே? இவனுக்கு.. ஆ......... கண்ணு.. கண்ணு வந்து வெள்ளையா இருக்கே.. இவனுக்கும் பேய் பிடிச்சுடுச்சா? ஹைய்யோ..ன்னு அலறிண்டே ஓட ஆரம்பிச்சேன். மஹா விகாரமா முகம் மாறி அந்த சின்ன பையனும் என்னை விறட்ட ஆரம்பிச்சான். மறுபடியும் ஓட்டம் ஓட்டம்.

ராதாநகரில் காஸெட் ரிக்கார்ட் பண்ண கொடுத்து ஒரு வாரமாச்சு. இன்னிக்கு தரேன்னு சொல்லி இருக்கான். வாங்கிடணும். அதுக்குள்ளே இவ்ளோ ரகளை.
அம்மா கூர்க் காபிப்பொடி வாங்க சொல்லி இருக்காங்க. அப்படியே நாடார் கடையில என்னமோ வாங்க சொல்லி.... மறந்துடுத்தே?

இவ்ளோ கூட்டத்துல அருண் பாப்பா என்ன தனியா நடந்து போயிண்டு இருக்கான்? அம்மா எங்கே? அம்மா.. அம்மா.. கூப்பிட்டு பார்க்கறேன்.. யாரையும் காணோம். கூட்டத்தில் குழந்தையை நழுவ விட்டுட்டேனே.. அருண்ன்னு கத்தி கத்தி பார்க்கறேன்.. காணோம். குறுகலான பாதை தாண்டி, சைக்கிள் தள்ளிண்டு போறேன். சத்குரு சாயினாத் மஹராஜ்கீ ஜெய்ன்னு கோஷங்கள் கேக்கறது. யாரோ கோயில்ல ஆரத்தி நடக்கறது. எட்டிப்பார்க்கறேன். ஒரே புகை. ஒண்ணுமே தெரியலை. சைக்கிளோடு நான் அங்கே நுழையறேன், காலுக்கு கீழே தரையில்லை.. அப்போத்தான் அது மலை உச்சியில இருந்து கீழே.. கீ....................................ழே விழுந்துண்டே...... அம்ம்ம்ம்ம்மா........ன்னு கத்திண்டே..  ரங்கு உலுக்கி விழுந்து எழுந்து, ”என்னம்மா?”ன்னு கேக்கறார். அம்மா எங்கேன்னு கேக்கறேன். படுத்துக்கோன்னு ரங்கு ஆசுவாசப்படுத்தறார்.

ப்ச்.. என்ன கனவுகள். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா எதுவும் நினைக்காம தூங்க முடியறதா.. சின்ன வயசுல இருந்து எல்லாமும் ரீவைண்டு ஆகுது. இந்த லஷணத்துல பரீட்சை, மத்தியானம் பார்த்த பேய்ப்படத்தின் மிச்ச சொச்சம் எல்லாம் வருது. என்னத்த சொல்ல?நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா மாதிரி யாரோ என்னை துரத்துவதும், என் முதுகைக்கூச வைக்கும் பிளக்கும் உணர்வும் எப்போத்தான் போகுமோ? விபூதியை வெச்சுண்டு மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் கனகதுர்க்கம்மா கோவில் படிகளில் ஏறிண்டு இருக்கேன்.
Related Posts with Thumbnails