சினிமாப்பக்கம்
போன வாரம் நிறைய படங்கள் பார்த்தோம்.
வார இறுதியில் கோபாலண்ணா வந்திருந்தார். ஹிந்திப்படம் சீ டி எடுக்கலாம் என்றதும் அலறி அடித்துக்கொண்டு மறுத்தார். அவருடைய டீனேஜ் குழந்தைகளால் தான் அந்த அலர்ஜி. இப்போ வெளியாகும் ஹிந்திப்படங்களில் எப்போப்பாரு கன்னா பின்னா டான்ஸ் தான் இடம்பெறும் வேண்டாமே என்று மன்றாடினார். அவரை தாஜா பண்ணி, கடைக்கு கூட்டிண்டு போயி, மதுர் பண்டார்கரின் ஜெயில் என்ற படம் எடுத்தோம். கடைசி வரை அண்ணா, ”ஹிந்திப்படம் வேணாம், என்னை விட்றுங்க” என்று கெஞ்சினார். ம்ஹூம், நாங்க விட்டாத்தானே?
படம் போட்டப்புறம், அண்ணா முழுதும் ஒன்றிவிட்டார். நீல் நிதின் முகேஷின் நடிப்பில் லயித்துவிட்டோம். இந்தப்பையனுக்கு நவரசமும் எப்படி இவ்ளோ அனாயாசமா வருகிறது?முதலில் இவர் பழம்பெரும் வில்லன் நடிகர் தலீப் டாஹெரின் மகனாக இருக்கலாம் என்றே நினைத்தோம். இவர் ராஜ்கபூருக்கு பாடிய முகேஷின் பேரன் என்பது தெரிந்து ரொம்ப ஆச்சர்யப்பட்டோம். மதுர் யதார்த்த டைரக்டர் வேறு. பாலிவுட் ஃபார்முலாப்படி ஒரு அரைகுறை டான்ஸ் மட்டும் தான் வைப்பார் இவர். (படத்தை விக்கணுமே, மன்னித்தேன்.)மத்தப்படி பாலிவுட் அம்சங்களா? மூச். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைக்களம் எடுத்துக்கொண்டு பிச்சு உதறுவார். சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், டிராபிக் சிக்னல், ஃபேஷன், இந்த வழியில் இப்போது ஜெயில். முதலில் நான் கொஞ்சம் பயந்துகொண்டு தான் இருந்தேன். வழக்கமான மதுர் படங்களெல்லாம் உள்ளது உள்ளபடி தோலுறித்து காட்டிவிடுவார். போதாக்குறைக்கு நம்ம மிகைப்படுத்தப்பட்ட மசாலாப்படங்களில் காட்டப்படும் ஜெயில் வன்முறையெல்லாம் இதிலும் இருக்குமோ என்று கொஞ்சம் டென்ஷன் இருந்தது. நல்ல வேளை. ஜெயிலில் வன்முறை எதுவும் இல்லை. மனித உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும்படியாக அழகா எடுத்திருக்கார். நான் நினைக்கறேன், இந்த மதுரிடம் ஒரு குண்டூசியைக்கொடுத்து இதைப்பத்தி படம் எடுங்கன்னு சொன்னாக்கூட எடுத்துவிடுவார் போல இருக்கு, மனிதரிடம் அவ்வளவு திறமை இருக்கிறது.
மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி என்றால் என் கணவருக்கு அதீத ஆர்வம். இந்த இயக்குனரின் ரெண்டு படங்கள் பார்க்க முடிந்தது.சமீபமாக ’பிரமரம்’ டீவீடீ காபிடல் வீடியோஸில் கிடைத்தது. பிரமரம் அருமையான படம். ஒரு எக்ஸண்ட்ரிக் மனிதனின் கதையை மிக அழகாக நயத்துடன் சொல்லி இருக்கிறார், ப்ளஸ்ஸி. கூடவே அழகான கேரளத்தை இன்னும் அழகுடன் காட்டிய அஜயன் வின்சென்டுக்கு உஜாலா ஃபில்ம்ஃபேர் அவார்டு கிடைத்தது.மீண்டும் மீண்டும் மோஹன்லால் ‘என்னை மிஞ்ச முடியுமா’ என்று நினைவு படுத்தும் படம். பாதிபடத்தின் போதே படத்தின் சஸ்பன்ஸ் ஊஹிக்க முடிவதாக இருப்பது தான் நெருடல். ஆனால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனின் உணர்ச்சிகளை மிக அலட்சியமாக நடிக்க முடிந்தது, லாலின் திறமையேயன்றி வேறில்லை. எல்லோரும் படத்தில் கச்சிதமாக ஒட்டுகிறார்கள், பூமிகாவைத்தவிற. சம்பந்தமே இல்லாமல் அவர் உடல்மொழியும், அவர் இருப்பும் படத்திற்கும் அவருக்கும் ஒரு கனக்டிவிட்டி இல்லை. தேவை இல்லாமல் பூமிகாவை போட்டாச்சே என்றொரு பாட்டு. யூ டூ ப்ளெஸ்ஸி? பல இடங்களில் இந்த காட்சி எதற்கு என்ற குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை. நடுவில் ஃபைட் எல்லாம் - சாரி ப்ளெஸ்ஸி.
இதே இயக்குனரின் இன்னொறு மிக ஆவலாக எதிர்பார்த்த படம் கல்கத்தா நியூஸ். குடியரசு தினத்தன்று ஏஷியனெட்டில் காட்டினார்கள். கஷ்டம் கஷ்டம். பல நல்ல படங்களை எடுத்த ப்ளெஸ்ஸியா இப்படி ஒரு சொதப்பல் படத்தை எடுத்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. படம் முதலில் அருமையாக ஆரம்பிக்கிறது. ஏனோ நேரம் போகப்போக வெவ்வேறு ட்ராக்குகளில் பயணித்து கடைசியில் ஒரேடியாகக் குட்டையைக்குழப்பி.. யப்பா. முதலில் சமூஹ அக்கறை படம் என்று தான் நினைத்தேன். அடுத்தடுத்த காட்சிகளில் யூத் படம் என்று தோன்றியது, போகப்போக, மாயாஜால பேய்ப்படமோ? அல்லது அன்னியன் மாதிரி சைக்கோலாஜிக்கல் திரில்லரோ? என்றெல்லாம் குழம்பி, என்னை மாதிரி ஒரு சராசரி பார்வையாளரைக்கூட திருப்தி படுத்த முடியாத மெகா சொதப்பல் படம் என்பது தெரிந்தது.எல்லாப்படங்களிலும் மீரா ஒரே மாதிரி நடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் இந்த படத்தில் ஒரு பெண் புதிய நகரத்தில் எக்கசெக்கமாக மாட்டியும் அதே ’ஹேப்பி கோ லக்கி’யாக திரிவது ஒன்றும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.எல்லா படங்களிலும் கலாட்டா கிங்காக வரும் திலீப் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார். எனக்கு மட்டும் இவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும் என்றே பட்டது. மீண்டும் சாரி மீரா, சாரி பிளஸ்ஸி. இனி ப்ளெஸ்ஸி படங்கள் எல்லாம் ரிவ்யூ பார்த்துவிட்டு தான் எடுக்க வேண்டும். நெட்டில் இந்த ரெண்டு படங்களும் நாரி இருக்கின்றன. இந்த விமர்சனம் அதன் பாதிப்பு அல்ல. அதிலும் பிரமரம் எனக்கு ஓக்கே.ஆனா கல்கத்தா - யப்பா..
தேவையே இல்லாமல் 2 தெலுங்குப்படம் பார்த்தோம். கொத்தபங்காரு லோகம் & சிந்தகாயல ரவி. யாராவது சொல்லக்கூடாதாப்பா? வடிவேலு போல ஆள்காட்டி விரலை கண்களுக்கு நேரே வைத்துக்கொண்டு ”பாப்பியா பாப்பியா” என்று கேட்டுக்கொள்ள வைத்தன இவ்விரண்டு படங்களும். ரொம்ப நொந்துட்டோம். இந்தப்படங்களுக்கெல்லாம் என்னால விமர்சனம் எழுத முடியாது. மஹா த்ராபை. சிந்தகாயல ரவி பார்த்த பிறகு தான் தென்றலின் அறிமுகம் கிடைத்தது. இல்லாவிட்டால் ஒரு டிசாஸ்டரை தவிர்த்திருக்கலாம். இந்த தெலுங்குப்படம் எடுப்பவர்கள் திருந்தவேண்டும். இப்படி மொக்கைகள் எடுக்கும் இவர்கள் ஊரில் நாடோடிகள் சக்கைபோடு போடுகிறதாம். அட, பராவாயில்லையே..
ஆயிரத்தில் ஒருவன் பார்த்த கையோடு, நான் செய்த முதல் ’காரியம்’ மோஹினித்தீவு என்ற கல்கியின் கதையைப்படித்தது தான். சில பல சைட்டுகளில் இந்தப்படம் கல்கியின் மோஹினித்தீவு என்ற கதையை தழுவியது என்றபடியால், அதை டவுன்லோடு செய்து ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தேன்.என்ன ஒரு ரிலீஃப்.. ஆஹா.. இதையே படமாக எடுத்திருக்ககூடாதா என்று என்னை ஏங்கவைத்தது அந்த ஹிஸ்டாரிக்கல், திரில்லர். அடுத்தகட்டமாக மகதீரா டவுன்லோடு செய்து பார்த்தேன். இந்த ஆயிரத்தில் ஒருவனுக்கு மகதீரா எவ்வளவோ தேவலாம். சில பல விட்டாலாச்சார்யா காட்சிகள், அபத்தமான லாஜிக் இடிபட்டாலும் இந்தப்படத்தை பற்றிய மஹேஷின் பதிவைப்படித்தபடியால் நான் கிராபிக்ஸ் காட்சிகளையே அதிகம் எதிர்நோக்கி இருந்தேன். என்னை ஏமாற்றவில்லை என்றே சொல்வேன். மகதீரா நிஜமாகவே மாவீரன் தான்.
தும் மிலே என்ற படத்தை ஈ வியூவில்(Movie on Demand) அடிக்கடி காட்டி, ”பைசா கட்டு, படத்தை பாரு” என்று கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஈ வியூவில் பாடாவதி தான் இடம்பெறும். ஆனால் இந்த சோஹா கான் மேல் (மும்பை மேரி ஜான்னுக்கு பிறகு) எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.சரி இந்தப்படத்தை விட்டுவைப்பானேன் என்று பார்த்தோம். சுத்தமாக தேரவில்லை. எப்போ படம் முடியும் என்று காத்திருக்கச்செய்த்து. ஓவராக அமரிக்க கலாச்சாரம் எரிச்சலூட்டியது. மும்பாய் வெள்ளத்தை வைத்து எடுக்கப்பட்டது என்ற போதினும் நகம்கடிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. சும்மாங்காச்சுக்கும் ரெண்டு பேரை தண்ணீரில் அலைய விட்டு கடுப்பேத்துகிறார்கள்.



